Friday, 6 November 2020

சிங்கப்பெண்ணே கவிதை

 பெண் உலகம்…


பூ வாசல் திறந்துகொண்டு

பூவுலகை பார்ப்பதற்குள்

கள்ளிப்பாலை ஏந்திக்கொண்டு

கிழவியவள் காத்திருப்பாள்….


கள்ளிப்பாலில் தப்பித்து

தாய்ப்பாலை அருந்துகையில்

முதல் போராட்டத்தில்

வெற்றி வாகை சூடிடுவாள்……


தாவணியை தந்துவிட்டு

பள்ளிக்கு தடை போடும்

பட்டிக்காட்டு அப்பாவிடம்

கெஞ்சிக் கூத்தாடி

பள்ளிக்குச் சென்றிடுவாள்….


பத்தாம் வகுப்பிலேயே

பரிசம் போட்டு விட

படிக்காத மாமன் மகன்

தட்டோடு வந்திடுவான்….


உயர் படிப்பு படிக்க வேண்டி

உதறித் தள்ளிவிட்டு

ஊரை எதிர்த்துக் கொண்டு

கல்லூரிக்கு சென்றிடுவாள்….


வண்ண வண்ண கனவுகளுடன்

பட்டம் பெற்றிடவே

விடுதியில் தங்கி

வீரநடை போட்டிடுவாள்…..


தங்க மகளின்

பூங்கனவை கலைத்திடவே

தகாத கூட்டம் ஒன்று

தரம் கெட்டு அலைந்திடுமே…


பெண்மையை சீண்டும்

மிருகக் கூட்டத்தை

பார்வை கனல் கொண்டு

பொசுக்கிடுவாள்….


பட்டம் பெற்று

பதவியில் அமர்ந்து

சாதனைப்பெண்ணாய்

மின்னிடுவாள்…..


உதிரம் கொடுக்கும்

வலியினையும்

புன்னகையாலே

மறைத்திடுவாள்….


மணம் கொண்ட

மணாளனுக்காக

தனக்கென‌ வாழ

மறந்திடுவாள்….


உலகைக் காணும்

இன்னொரு உயிரை

உதிரம் கொடுத்து

பெற்றிடுவாள்…


தாய் பால் சுரந்த

நாள் முதலாய்

தாயாய் மட்டுமே

வாழ்ந்திடுவாய்…


பிள்ளையை காக்க

பூமனம் கொண்டவள்

பூகம்பம் வந்தாலும்

எதிர்த்திடுவாள்…


உடம்பும் மனமும்

வலி கொண்டு

 துடித்தாலும் கண்ணீருக்குள்

மறைத்திடுவாள்…


நரை கொண்டு

தரை தட்டி நடந்தாலும்

சிங்கப் பெண்ணாய்

ஜொலித்திடுவாள்…


விதியின் மதியால்

விண்ணுலகம் சென்றாலும்

மீண்டும் பெண்ணாய்

பிறந்திடுவாள்…..





3 comments:

Banupriya Ramanathan said...

பெண் பற்றிய எனது கவிதை
உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன

Unknown said...

கவிதை கவிதை....👍

Banupriya Ramanathan said...

Thank you