ஏழையின் தீபாவளி
தின்னவே வழியில்ல
தீபாவளி நமக்கு எதற்கு!
பஞ்சத்துக்கு பிறந்தோம்- நாம் பண்டிகை தான் நமக்கு எதற்கு…
என..
பிள்ளைகளை பெத்தவங்க
சோகத்துல சொல்வாங்க..
சேலை வாங்கித் தரும்
முதலாளி அம்மாவிடம்..
பிள்ளைக்கு வாங்கணும்
பணமாய் கொடுத்துடுங்க..
என
கெஞ்சி வாங்கி வரும்
கொஞ்ச பணத்தில தான்
புது துணி எடுக்க
சீமைக்கு செல்வாங்க..
பட்டாசு கடைகளையே
பராக்கு பார்த்து வரும்
பத்து வயது மகனை
கட்டியணைத்தபடி
கண்ணீரில்
நனைத்திடுவாள்.
வக்கற்ற அவள் அன்னை...
அவள் கண்ணீர் துளி பட்டு
பட்டாசும் நமத்து விடும்..
பட்டாசு வெடித்தது போல்
பாவி மனம் படபடக்கும்…
அலுத்து சலுத்துவரும்
அப்பாவின் முகம் கண்டு
பட்டாசு ஆசையெல்லாம்
பரண் மேல் போட்டிடுவான்
பத்து வயது ஏழைமகன்.
கூலிக்கு மாரடிக்கும்
ஏழையின் மகனடா..
கதியின்றி நானடா
இது உனக்கு
விதி செய்யும் சதியடா..
என
உறங்கும் மகனைக் கண்டு
உளறல் செய்துவிட்டு
வாங்கித் தர வழியின்றி
வாய்விட்டு அழுதிடுவான்
வக்கற்ற தந்தையவன்...
போனஸ் பணம்
வாங்கிக்கொண்டு..
போரில் வென்றவன் போல்
நெற்றி வியர்வை தந்த
வெற்றிக்களிப்பில்
குதுகலம் கொண்டிடுவான்..
ஆசை மகனை
கையில் பிடித்துக் கொண்டு..
பண்டிகை கொண்டாட
நம்பிக்கை வந்தது போல்
பட்டாசு கடைக்கு
சிட்டாய் பறந்திடுவான்..
பட்டாசை பார்த்ததும்
பட்டாம் பூச்சியைப் போல்
பரவசத்தில் பறந்திடுவான்
பத்து வயது பரந்தாமன்..
ஆசை மகனை
வீட்டில்விட்டுவிட்டு
கையிருப்பு குறைவதற்குள்
கட்டிய மனைவிக்கு
சேலை வாங்க சென்றிடுவான்.
வீதியோர கடைதனிலே
பேரம் பேசி வாங்கி வந்த
கனகாம்பர புடவையினை
கனகாவிற்கு கொடுத்திடுவான்…
புடவையை கண்டதும்..
வெட்கப் புன்னகையை
பரிசாய் தந்து விட்டு
மாமனுக்கு வாங்கி வைத்த
வேட்டி சட்டையினை
கையில் திணித்திடுவாள்..
காசில்லா நேரத்தில்
எனக்கு எதற்கு வேட்டி என
செல்லமாய் திட்டிவிட்டு
மெல்லமாய் கொஞ்சிடுவான்..
ஓடிஓடி உழைத்தாலும்
கஷ்டப்பட வைத்தாலும்
பண்டிகை
தான் நமக்கு
சந்தோஷத்தை
அள்ளித் தரும்..
இந்த
ஒருநாள்
சந்தோஷத்துல
வருடம் முழுதும் பட்டவலி
பறந்தே போய் விடும்.
கண்டதையும் குழப்பாம
கண் மூடி தூங்கு மாமா..
விடிந்ததும் தீபாவளி
எண்ணெய் தேச்சு
குளிச்சிடுவோம்
பீடையெல்லாம்
ஒழிச்சிடுவோம்..
புத்தாடை கட்டிக்கிட்டு
பட்டாசு கொளுத்தி விடும்
பரந்தாமன் அழகை பார்த்து
மகிழ்ச்சியில் திளைத்திடுவான்..
இட்லிக்கு கறி குழம்பும்
பலகார பட்டணமும்
வருடத்துக்கு ஒருமுறைதான்
சாப்பிட வா மகனே!
என செல்லமாய் அழைத்திடுவான்..
பட்டாசு வெடித்த
பரவச சந்தோசத்தில்
முத்தம் மொத்தத்தையும்
அப்பாவிடம் தந்திடுவான்…
பண்டிகை கொண்டாடிய
சந்தோஷப் பெருமூச்சில்
மருதாணி கைகளில்
முகம் புதைத்து தூங்கிடுவான்..
பகலும் முடிந்தது
பண்டிகையும் முடிந்தது
கனகா ஒரு பக்கம்
கட்டியவன் ஒரு பக்கம்
உழைக்க ஓடுகிறார்கள்
அடுத்த பண்டிகையை எண்ணிக்கொண்டு…
பண்டிகை தான் நமக்கு
சந்தோஷத்தை அள்ளித் தரும்